3273. ஆனவன் உரைக்க, நக்க அரக்கர்கோன்,
     'அவரை வெல்லத்
தானையும் வேண்டுமோ? என் தடக் கை
     வாள் தக்கது அன்றோ?
ஏனையர் இறக்கின், தானும் தமியளாய்
     இறக்கும் அன்றே
மானவள்? ஆதலாலே, மாயையின்
     வலித்தும்' என்றான்.

    ஆனவன் உரைக்க - உறவுடையவனான மாரீசன் இவ்வாறு
கூறுதலும்; நக்க அரக்கர் கோன் - அது கேட்டுச் சிரித்த இராவணன்;
அவரை வெல்ல - அம் மானுடரை வெற்றி கொள்ள; தானையும்
வேண்டுமோ -
சேனையும் அவசியம் தானோ?; என் தடக்கை வாள்
தக்கது அன்றோ -
என் வலிமைமிக்க கரங்களில் ஏந்திய வாள் ஒன்றுமே
போதாதோ? (போதும் என்றாலும்); ஏனையர் இறக்கின் - தன்னைச்
சார்ந்த இராமலக்குவர் மாய்வராயின்; மானவள் - மானுடப் பெண்ணான
சீதையும்; தானும் தமியளாய் - தானும் தனித்திருக்கும் நிலை கருதி;
இறக்கும் அன்றே - மடிந்து போவாள் அல்லவா?; ஆதலாலே
மாயையின் வலித்தும் -
அக்காரணத்தால் அவளை மாய வஞ்சனையில்
கைப்பற்றுவோம்; என்றான் - என்று சொன்னான்.

     மானவள் - மானுடப் பெண்; மான் போன்றவள், மானம் மிக்கவள்
எனப் பல பொருள் விரிக்க இடம் தருகிறது. வஞ்சனை செய்ய வாய்ப்பான
காரணம் கற்பிக்கின்றான் இராவணன். வஞ்சனைச் செயலுக்குச் சீதையிடம்
இராவணன் வேறு ஒரு காரணம் சொல்வதை இராவணன் சூழ்ச்சிப்
படலத்தில் காணலாம். (3401)                                    37