3273. | ஆனவன் உரைக்க, நக்க அரக்கர்கோன், 'அவரை வெல்லத் தானையும் வேண்டுமோ? என் தடக் கை வாள் தக்கது அன்றோ? ஏனையர் இறக்கின், தானும் தமியளாய் இறக்கும் அன்றே மானவள்? ஆதலாலே, மாயையின் வலித்தும்' என்றான். |
ஆனவன் உரைக்க - உறவுடையவனான மாரீசன் இவ்வாறு கூறுதலும்; நக்க அரக்கர் கோன் - அது கேட்டுச் சிரித்த இராவணன்; அவரை வெல்ல - அம் மானுடரை வெற்றி கொள்ள; தானையும் வேண்டுமோ - சேனையும் அவசியம் தானோ?; என் தடக்கை வாள் தக்கது அன்றோ - என் வலிமைமிக்க கரங்களில் ஏந்திய வாள் ஒன்றுமே போதாதோ? (போதும் என்றாலும்); ஏனையர் இறக்கின் - தன்னைச் சார்ந்த இராமலக்குவர் மாய்வராயின்; மானவள் - மானுடப் பெண்ணான சீதையும்; தானும் தமியளாய் - தானும் தனித்திருக்கும் நிலை கருதி; இறக்கும் அன்றே - மடிந்து போவாள் அல்லவா?; ஆதலாலே மாயையின் வலித்தும் - அக்காரணத்தால் அவளை மாய வஞ்சனையில் கைப்பற்றுவோம்; என்றான் - என்று சொன்னான். மானவள் - மானுடப் பெண்; மான் போன்றவள், மானம் மிக்கவள் எனப் பல பொருள் விரிக்க இடம் தருகிறது. வஞ்சனை செய்ய வாய்ப்பான காரணம் கற்பிக்கின்றான் இராவணன். வஞ்சனைச் செயலுக்குச் சீதையிடம் இராவணன் வேறு ஒரு காரணம் சொல்வதை இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் காணலாம். (3401) 37 |