3275.'என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது?
     இயம்புக' என்றான்,
'பொன்னின் மான் ஆகிப் புக்கு,
     பொன்னை மால் புணர்த்துக' என்ன,
'அன்னது செய்வென்' என்னா,
     மாரீசன் அமைந்து போனான்;
மின்னு வேல் அரக்கர்கோனும் வேறு
     ஒரு நெறியில் போனான்.

    'என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது? - நான் எவ்வகையான
பெரிய மாயம் இங்கே செய்ய வேண்டும்?; இயம்புக என்றான் - கூறுக
என மாரீசன் கேட்டான் (அதற்கு இராவணன்); பொன்னின் மானாகிப்
புக்கு -
ஒரு பொன் மானாகக் (காட்டில்) நுழைந்து; பொன்னை - பொன்
போன்ற சீதைக்கு; மால் புணர்த்துக - மயக்கத்தை ஏற்படுத்துக; என்ன -
என்று திட்டம் தந்தான்; 'அன்னது செய்வென் என்னா - அவ்வாறே
செய்கின்றேன் என்று; மாரீசன் அமைந்து போனான் - மாரீசன் ஏற்றுக்
கொண்டு புறப்பட்டான்; மின்னு வேல் அரக்கர் கோனும் - ஒளிவீசும்
வேல் ஏந்திய அரக்கர் தலைவனும்; வேறொரு நெறியில் போனான் -
மற்றொரு திசையில் புறப்பட்டுச் சென்றான்.

     மாரீசனுக்கு மாயா மார்க்கம் உணர்த்தப்படவே, மாயமான் ஆதற்கு
அவன் செல்லலானான்.                                        39