மாரீசன் மனநிலையும் செயலும் கலிவிருத்தம் 3276. | மேல்நாள் அவர் வில் வலி கண்டமையால், தான் ஆக நினைந்து சமைந்திலனால்; 'மான் ஆகுதி' என்றவன் வாள் வலியால் போனான் மனமும், செயலும் புகல்வாம். |
மேல் நாள் - முன் காலத்தில்; அவர் வில்வலி கண்டமையால் - இராமலக்குவர் வில்லாற்றலைக் கண்டறிந்திருப்பதால்; தானாக நினைந்து - (மாயமான் ஆதற்குத்) தானாகவே எண்ணி; சமைந்திலன் - மாரீசன் முடிவு செய்தான் இல்லை; மான்ஆகுதி - மாய மான் வடிவினை எடு; என்றவன் வாள் வலியால் போனான் - என ஆணையிட்ட இராவணன் வாளின் வலிமையை அறிந்திருந்ததால் அவன் ஆணையை ஏற்றுக் கொண்டவனாகிய மாரீசனது; மனமும் செயலும் புகல்வாம் - எண்ணத்தையும் செய்த செயல்களையும் இனிக் கூறுவோம். கவிக்கூற்று. போனான் - வினையாலணையும் பெயர். ஆல்- அசை. 40 |