3277. | வெஞ் சுற்றம் நினைந்து உகும்; வீரரை வேறு அஞ்சுற்று மறுக்குறும்; ஆழ் குழி நீர் நஞ்சு உற்றுழி, மீனின் நடுக்குறுவான் நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால். |
வெஞ் சுற்றம் - தன் விருப்பத்துக்கு உரிய உறவினரை; நினைந்து உகும் - (மாரீசன் மனம்) எண்ணி வருந்துவான்; வீரரை வேறு அஞ்சுற்று மறுக்குறும் - இராமலக்குவராகிய வீரர்களை ஒருபுறம் நினைந்து அச்சமுற்று மயங்குவான்; ஆழ் குழி நீர் - ஆழ்ந்த பள்ளத்து நீரானது; நஞ்சு உற்றுழி - முற்றும் நச்சுமயமானால்; மீனின் நடுக்குறுவான் - மீன்கள் என்ன பாடு படுமோ அவ்வாறு நடுக்கமும் கொண்டான்; நெஞ்சு உற்றது ஓர் பெற்றி - அவன் நெஞ்சம் அடைந்த உணர்ச்சித் தன்மை; நினைப்பு அரிது - இவ்வாறிருந்தது என எண்ணிட முடியாததாய் இருந்தது; ஆல் - ஈற்றசை. அழிவு உறுதி என்பதால் பிரிகின்ற சுற்றத்தை நினைத்து வருந்தினான். நச்சு நீரில் தப்பிக்க முடியாத மீன்போல் துடித்தான் மாரீசன்.41 |