3277.வெஞ் சுற்றம் நினைந்து
     உகும்; வீரரை வேறு
அஞ்சுற்று மறுக்குறும்; ஆழ்
     குழி நீர்
நஞ்சு உற்றுழி, மீனின்
     நடுக்குறுவான்
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி
     நினைப்பு அரிதால்.

    வெஞ் சுற்றம் - தன் விருப்பத்துக்கு உரிய உறவினரை; நினைந்து
உகும் -
(மாரீசன் மனம்) எண்ணி வருந்துவான்; வீரரை வேறு அஞ்சுற்று
மறுக்குறும் -
இராமலக்குவராகிய வீரர்களை ஒருபுறம் நினைந்து
அச்சமுற்று மயங்குவான்; ஆழ் குழி நீர் - ஆழ்ந்த பள்ளத்து நீரானது;
நஞ்சு உற்றுழி - முற்றும் நச்சுமயமானால்; மீனின் நடுக்குறுவான் -
மீன்கள் என்ன பாடு படுமோ அவ்வாறு நடுக்கமும் கொண்டான்; நெஞ்சு
உற்றது ஓர் பெற்றி -
அவன் நெஞ்சம் அடைந்த உணர்ச்சித் தன்மை;
நினைப்பு அரிது - இவ்வாறிருந்தது என எண்ணிட முடியாததாய் இருந்தது;
ஆல் - ஈற்றசை.

     அழிவு உறுதி என்பதால் பிரிகின்ற சுற்றத்தை நினைத்து வருந்தினான்.
நச்சு நீரில் தப்பிக்க முடியாத மீன்போல் துடித்தான் மாரீசன்.41