மாயப் பொன் மானாய் மாரீசன் தோன்றுதல் 3279. | தன் மானம் இலாத, தயங்கு ஒளி சால் மின் வானமும் மண்ணும் விளங்குவது ஓர் பொன் மான் உருவம் கொடு போயினனால்- நன் மான் அனையாள்தனை நாடுறுவான். |
தன் மானம் இலாத - தனக்கு நிகர் இல்லாத; தயங்கு ஒளி சால் - அசைகின்ற ஒளி பொருந்திய; மின் - உடல் மின்னுதலால்; வானமும் மண்ணும் விளங்குவது ஓர் - விண்ணும் மண்ணும் விளக்கமுறும் படியான ஒரு; பொன் மான் உருவம் - தங்க மானின் வடிவம்; கொடு போயினன்- எடுத்துக் கொண்டு மாரீசன் சென்றான்; நன்மான் அனையாள் தனை - உயர்ந்த மான் போன்ற சீதையினை; நாடுறுவான் - தேடிச் சென்று அடைந்தான்; ஆல் - அசை. மாயமான் கண்டாரைக் கவரும் ஒளிமிக்கதாய் விளங்கியது. தனை நாடுறுவான் என்பதற்குச் சீதை தன்னை நாடும்படியாகச் சென்றான் எனவும் பொருள் கூறுவர். 43 |