3281. | பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால் நையா இடை நோவ நடந்தனளால்- வைதேவி, தன் வால் வளை மென் கை எனும் கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள். |
பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால் - (இவள் இடை) பொய்யே ஆகும் என்று அயலாளர் கூறுவதற்கேற்ப; நையா - வருத்தம் கொண்டு விளங்கும்; இடை நோவ - இடை நோகும்படி; நடந்தனள் - நடப்பவளாய்; வைதேவி - சீதை; தன் வால்வளை மென்கை எனும் - ஒளி பொருந்திய வளையல் அணிந்த தன் மெல்லிய கரங்கள் என்னும்; கொய்யா மலரால் - பறிக்கப்படாத மலர்களால்; மலர் கொய் குறுவாள் - கானகத்தில் பூப்பறிக்க முற்பட்டாள். ஆல் - அசை. இடை பொய் எனல் கவிதை மரபு. இதனால் இடைக்கு வருத்தம் ஏற்பட்டதாகக் கற்பித்தார். விதேக அரசன் குலமகள் என்பதால் வைதேகி எனப்பட்டாள். இங்கு வைதேவி எனத் திரிந்து வந்தது. கையெனும் கொய்யா மலர்' - பறவாக் கொக்கு என மாமரம் அழைக்கப்பட்டாற்போல் கரங்களை இவ்வாறு கூறினார். கொய்யா மலர் மலர் கொய்தது எனக் கவிதையழகு மிளிர முரண் அணியுடன் கூறினார். மூன்றாம் வரியில் 'வய்தேவி' என ஓசை எழுதலால் எதுகை பிழையாதாயிற்று. 45 |