மானைக் கண்டு மயங்கிய சீதை இராமனை அடைதல்

3284.நெற்றிப் பிறையாள்
     முனம் நின்றிடலும்,
முற்றிப் பொழி
     காதலின் முந்துறுவாள்,
'பற்றித் தருக என்பென்'
     எனப் பதையா,
வெற்றிச் சிலை
     வீரனை மேவினளால்.

    நெற்றிப் பிறையாள் முனம் - இளம் பிறை போலும் நெற்றியை
உடைய சீதை முன்; நின்றிடலும் - (மாய மான் வந்து) நிற்கவும்; முற்றிப்
பொழி காதலின் -
(அவள்) நிறைந்த ஆசை ததும்பி நிற்க; 'பற்றித் தருக'
என்பென் -
'இம் மானைப் பிடித்துத் தரவேண்டும்' என்று இராமனைக்
கேட்பேன்; எனப் பதையா - என உணர்ச்சி மிக்கவளாய்; (சீதை);
வெற்றிச் சிலை வீரனை - வில்லால் வெற்றி கொள்ளும் வீரனாகிய
இராமனை; முந்துறுவாள்; மேவினள் - அடைந்தாள். (ஆல் - அசை)  48