3285.'ஆணிப் பொனின் ஆகியது;
     ஆய் கதிரால்
சேணில் சுடர்கின்றது; திண்
     செவி, கால்,
மாணிக்க மயத்து ஒரு
     மான் உளதால்;
காணத் தகும்' என்றனள்,
     கை தொழுவாள்.

    (இராமனிடம் சென்று சீதை); 'ஆணிப் பொனின் ஆகியது -
மாற்றுயர்ந்த பொன்னால் ஆனதும்; ஆய் கதிரால் சேணில் சுடர்கின்றது-
சிறந்த ஒளியினால் தொலைவிலும் பளபளக்கின்றதும்; திண்செவி கால் -
வலிய காதுகளும் கால்களும்; மாணிக்க மயத்து - சிவந்த
மாணிக்கங்களால் ஆகியதுமான; ஒரு மான் உளது - ஒரு மான் காட்சி
தருகின்றது; காணத் தகும் - அழகால் காண்பதற்கு இனிதானது; என்றனள்-
என்று கூறியவளாய்; கைதொழுவாள் - (அதனைப் பற்றி அளிக்க
வேண்டுமெனக் கருதி) கையால் வணங்கி நின்றாள்; ஆல் - அசை.

     அம் மான் வேண்டுமென வாயால் கூறாது உணர்த்திக் காட்டினாள். 49