இராமன் பதிலுரை

3289. நில்லா உலகின் நிலை, நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர்; மன் உயிர்தாம்
பல் ஆயிரம்கோடி பரந்துளதால்;
இல்லாதன இல்லை-இளங்குமரா!

    இளங்குமரா - இளமையுடைய தம்பி!; நேர்மையினால் வல்லாரும் -
முறையான அறிவிலே திறமை சான்றவரும்; நில்லா உலகின் நிலை
உணர்ந்திலர் -
நிலையில்லா உலகின் தன்மை முற்றும் அறிந்ததில்லை;
மன் உயிர்தாம் - வாழும் நிலை பெற்ற உயிரினங்களோ எனில்; பல்
ஆயிரம் கோடி பரந்துளது -
எண்ணிலாக் கோடிகளாய் விரிந்து பரந்து
உள்ளன; இல்லாதன இல்லை - இவ்வுலகில் இல்லாதவை என்று (நம்
அறிவை மட்டும் வைத்து) எவற்றையும் விலக்கிக் கூற முடியாது' (என்றான்
இராமன்); ஆல் - அசை.

     உலகின் இயற்கை முழுவதையும் யாரும் கணித்தறிந்ததில்லை. அதிலும்
நீயோ இளங்குமரன், ஆனபடியால் புதிய ஒன்றை இல்லையென மறுத்தல்
பொருந்தாது என்றான் இராமன்.                                 53