3291. | 'முறையும் முடிவும் இலை, மொய் உயிர்' என்று, இறைவன் இளையானொடு இயம்பினனால்; 'பறையும் துணை, அன்னது பல் நெறி போய் மறையும்' என, ஏழை வருந்தினளால். |
'முறையும் முடிவும் - இப்படித்தான் இருக்க வேண்டுமென்னும் முறையும் முடிவும்'; மொய் உயிர் - உலகத்தில் தோன்றிய உயிர்களுக்கு; இலை - கட்டுத்திட்டம் ஒன்றும் கிடையாது'; என்று - என; இறைவன் - தலைவனாகிய இராமன்; இளையானொடு இயம்பினன் - தம்பியிடம் கூறினான்; ஏழை - (இதனிடையே) சீதையோ; 'பறையும் துணை - இவ்வாறு பேசி்க் கொண்டிருக்கிற நேரத்திற்குள்ளாக; அன்னது - அப்பொன் மான்; பல்நெறி போய் மறையும் - காட்டு வழிகள் பலவற்றுள்ளும் சென்று மறைந்து விடுமே'; என வருந்தினள் - எனப் (பேதமையால்) வருந்தலானாள். (ஆல் - அசை) அறியாமை சீதைக்கு ஏற்பட்டிருப்பதால் ஏழை என்றார். 55 |