இராமன் சீதையோடு சென்று மானைக் காணுதல் அறுசீர் ஆசிரிய விருத்தம் 3292. | அனையவள் கருத்தை உன்னா, அஞ்சனக் குன்றம் அன்னான், 'புனையிழை! காட்டு அது' என்று போயினான்; பொறாத சிந்தைக் கனை கழல் தம்பி பின்பு சென்றனன்; கடக்க ஒண்ணா வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே. |
அனையவள் கருத்தை உன்னா - சீதையின் இவ் வருத்தச் சிந்தனையை எண்ணி; அஞ்சனக் குன்றம் அன்னான் - நீல மலை போன்ற இராமன்; 'புனையிழை - நல்லணி புனைந்தவளே!; அது காட்டு' என்று போயினான் - அம்மானை எனக்குக் காட்டுவாயாக' என்று புறப்படலானான்; பொறாத சிந்தை - இதனை ஏற்றுக் கொள்ள மனமின்றி; கனைகழல் தம்பி - ஓசை செய்யும் வீரக் கழலணிந்த தம்பி இலக்குவனும்; பின்பு சென்றனன் - அவர்கள் பின்னே சென்றான்; கடக்க ஒண்ணா வினை என - தாண்டிச் செல்ல முடியாத விதியினைப் போல; வந்து நின்ற மான் - வந்து நின்ற மாயமான்; எதிர் விழித்தது - எதிரில் வந்து காட்சி தந்தது. (அன்றே-அசை). விதி, தவறாமல் பயனளிப்பது போன்று, மாயமான் தீமை விளைவிக்கத் தவறாது வந்து நின்றது, எனினும் கவனமுள்ள தம்பி பின்தொடர்ந்தான். 56 |