3293.நோக்கிய மானை நோக்கி, நுதியுடை
     மதியின் ஒன்றும்
தூக்கிலன்; 'நன்று இது' என்றான்;
     அதன் பொருள் சொல்லல் ஆகும்?
சேக்கையின் அரவு நீங்கிப்
     பிறந்தது தேவர் செய்த
பாக்கியம் உடைமை அன்றோ?
     அன்னது பழுது போமோ?

     நோக்கிய மானை நோக்கி - எதிரில் விழித்து நின்ற மானைஉற்றுப்
பார்த்து; நுதியுடை மதியின் ஒன்றும் தூக்கிலன் - இராமன்கூரிய
அறிவின் துணை கொண்டு எதனையும் சீர்தூக்கிப்பார்க்கவில்லை; நன்று
இது என்றான் -
இந்த மான் மிக அழகியதுஎன்று தானும் கூறினான்;
அதன் பொருள் சொல்லல் ஆகும்? -அச் சொல்லின் பொருள்
நுட்பத்தை ஆராய்ந்து கூற முடியுமோ? முடியாது); சேக்கையின் அரவு
நீங்கிப் பிறந்தது -
அனந்தசயனத்திலிருந்து மண்ணுலகில் வந்து
அவதாரம் செய்தமை; தேவர்செய்த பாக்கியம் உடைமை அன்றோ -
தேவர்கள் ஆற்றியபுண்ணியம் என்று கூறலாம் அல்லவா?; அன்னது பழுது
போமோ?-
அப் புண்ணியம் வீணாகிப் போகுமோ? (போகாது என்றபடி).

     தேவர் செய்த பாக்கியத்தால் இராமாவதாரம் நிகழ்ந்தமையின்,மாய
மானை இராமனும் தொடர ஆசைப்பட்டதன் கருத்து மறைமுகமாகப்
புலனாகின்றது என்று சுட்டிக் காட்டினார்.                        57