3293. | நோக்கிய மானை நோக்கி, நுதியுடை மதியின் ஒன்றும் தூக்கிலன்; 'நன்று இது' என்றான்; அதன் பொருள் சொல்லல் ஆகும்? சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது தேவர் செய்த பாக்கியம் உடைமை அன்றோ? அன்னது பழுது போமோ? |
நோக்கிய மானை நோக்கி - எதிரில் விழித்து நின்ற மானைஉற்றுப் பார்த்து; நுதியுடை மதியின் ஒன்றும் தூக்கிலன் - இராமன்கூரிய அறிவின் துணை கொண்டு எதனையும் சீர்தூக்கிப்பார்க்கவில்லை; நன்று இது என்றான் - இந்த மான் மிக அழகியதுஎன்று தானும் கூறினான்; அதன் பொருள் சொல்லல் ஆகும்? -அச் சொல்லின் பொருள் நுட்பத்தை ஆராய்ந்து கூற முடியுமோ? முடியாது); சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது - அனந்தசயனத்திலிருந்து மண்ணுலகில் வந்து அவதாரம் செய்தமை; தேவர்செய்த பாக்கியம் உடைமை அன்றோ - தேவர்கள் ஆற்றியபுண்ணியம் என்று கூறலாம் அல்லவா?; அன்னது பழுது போமோ?- அப் புண்ணியம் வீணாகிப் போகுமோ? (போகாது என்றபடி). தேவர் செய்த பாக்கியத்தால் இராமாவதாரம் நிகழ்ந்தமையின்,மாய மானை இராமனும் தொடர ஆசைப்பட்டதன் கருத்து மறைமுகமாகப் புலனாகின்றது என்று சுட்டிக் காட்டினார். 57 |