3296. ஆரியன் அனைய கூற,
     அன்னதுதன்னை நோக்கி,
'சீரியது அன்று இது' என்று,
     சிந்தையில் தெளிந்த தம்பி,
'காரியம் என்னை, ஈண்டுக்
     கண்டது கனக மானேல்?
வேரி அம் தெரியல் வீர! மீள்வதே
     மேன்மை' என்றான்.

    ஆரியன் - மேன்மை மிக்க இராமன்; அனைய கூற - இவ்வாறு
எடுத்துக் கூறவும்; அன்னது தன்னை நோக்கி - அந்த மானை உற்றுப்
பார்த்து; 'இது சீரியது அன்று - இம்மான் இயற்கையானது அன்று'; என்று
சிந்தையில் தெளிந்த தம்பி -
என்று தன் மனத்தில் உறுதி கொண்ட
தம்பி இலக்குவன்; வேரி அம் தெரியல் வீர - மணம் கமழ்கின்ற
மாலையணிந்த வீரனே; ஈண்டு கண்டது கனக மானேல் - இங்குக்
காணப்படுவது பொன்மானாக இருக்கிற தென்றாலும்; என்னை
காரியம்? -
அதனால் நமக்கு என்ன பயன்?; மீள்வதே மேன்மை -
அதனை விட்டு நீங்கி வருவதே மேலான செயல்; என்றான் - என்று
கூறினான்.

     அது பொன்மயமான மான் என்பதால் நமக்கு என்ன பயன்என்ற
இலக்குவன் வினாவில், மாயையிலிருந்து விரைவி்ல் இராமன்மீள வேண்டுமே
என்ற கவலை மேலோங்கி நிற்கின்றது.                             60