மானைப்பற்றி இராமலக்குவர் மாறுபாடு கொள்ளல்

3298. ஐய நுண் மருங்குல் நங்கை அஃது
உரைசெய்ய, ஐயன்,
'செய்வென்' என்று அமைய, நோக்கத்
     தெளிவுடைத் தம்பி செப்பும்
'வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார்
     வினையின் செய்த
கைதவ மான் என்று, அண்ணல்! காணுதி
     கடையின்' என்றான்.

    ஐய நுண் மருங்குல் நங்கை - 'உண்டோ, இல்லையோ' என
ஐயுறத்தக்க சிறிய இடையை உடைய சீதையாகிய நங்கை; அஃது
உரை செய்ய -
இவ்வாறு தன் ஆசையை வெளியிட்டுப் பேச; ஐயன்-
தலைவனாகிய இராமன்; செய்வென் என்று அமைய - இதோ
பிடித்துத் தருகிறேன் என்று முடிவு கூற; நோக்கத் தெளிவுடைத்
தம்பி -
சிந்தனையில் தெளிவுடைய தம்பி இலக்குவன்; செப்பும் -
தமையனிடம் கூறலானான்; 'அண்ணல்! - என் தலைவனே; வெய்ய
வல்லரக்கர் -
கொடுமையும் வன்மையும் உடைய அரக்கர்கள்;
வஞ்சம் விரும்பினார் - வஞ்சனை செய்ய விரும்பியவராய்;
வினையின் செய்த - தந்திரத்தால் இயற்றித் தந்த; கைதவ மான்
என்று -
மாயமான், என்று; கடையின் காணுதி - முடிவில் உணர்ந்து
கொள்வாய்; என்றான் - என்று (எச்சரித்துக்) கூறினான்.

     இலக்குவனின் விடாப்பிடியான அறிவுக் கூர்மையும் கடமை
உணர்வும்
இங்குப் புலனாகின்றன. ஐய நுண் இடை என்பதற்கு
மிகவும் சிறிய இடை எனவும் பொருள் கொள்ளலாம்; ஐய எனின்
நுட்பம் என்று பொருள்படும்.                                    62