3299. | 'மாயமேல், மடியும் அன்றே வாளியின்; மடிந்தபோது காய் சினத்தவரைக் கொன்று கடன் கழித்தோமும் ஆதும்; தூயதேல், பற்றிக் கோடும்; சொல்லிய இரண்டின் ஒன்று தீயதே? உரைத்தி' என்றான்-தேவரை இடுக்கண் தீர்ப்பான். |
'மாயவேல் - நீ கூறுவது போல் மாயமானாக இருக்குமாகில்; வாளியின் மடியும் அன்றே - என் அம்புக்கு அது இரையாகும் அல்லவா?; மடிந்த போது - அவ்வாறு மரணமுறும் போது; காய் சினத்தவரைக் கொன்று - கொடிய சினம் கொண்ட அரக்கரை அழித்து; கடன் கழித்தோமும் ஆதும் - நம் கடமையை ஆற்றினவர்களும் ஆவோம்; (அன்றி); தூயதேல் - உண்மையான மானாக இருக்குமாகில்; பற்றிக் கோடும் - பிடித்துக் கொண்டு வருவோம்; சொல்லிய இரண்டின் ஒன்று - இப்போது நான் கூறிய இரண்டில் ஏதேனும் ஒன்றை; தீயதே - தீமை என்று கூற முடியுமா?; உரைத்தி - சொல்லுவாயாக; என்றான் - என்று சொன்னான்; தேவரை இடுக்கண் தீர்ப்பான் - வானவர் துன்பத்தையும் அழிக்க வல்ல இராமன். மாயமான், மெய்யான மான் என்ற இரண்டு நிலையிலும்மானைப் பிடிப்பதால் தீமை இல்லை என உரைத்தான் இராமன். மாயமான் சாக்கிட்டு அவதார நோக்கம் நிறைவெய்தப் போவதால்,'தேவரை இடுக்கண் தீர்ப்பான்' என்று இராமனைக் குறித்தார். 63 |