3301.'பகையுடை அரக்கர் என்றும், பலர்
     என்றும், பயிலும் மாயம்
மிகையுடைத்து என்றும், பூண்ட
     விரதத்தை விடுதும் என்றல்
நகையுடைத்து ஆகும் அன்றே? ஆதலின்
     நன்று இது' என்னா,
தகையுடைத் தம்பிக்கு, அந் நாள்,
     சதுமுகன் தாதை சொன்னான்.

     'பகையுடை அரக்கர் என்றும் - நமக்குப் பகைவரான அரக்கர்
பெயரைக் கூறியும்; பலர் என்றும் - அவர்கள் எண்ணிக்கையால்
பலர் என்று பயமுறுத்தியும்; பயிலும் மாயம் மிகையுடைத்து என்றும்-
அவர்களின் மாயத் தந்திரங்கள் மிகுதியானவை என்று கூறியும்;
பூண்ட விரதத்தை - அவர்களை அழிக்க நாம் கொண்ட விரதத்தை;
விடுதும் என்றல் - விட்டு விடக் கருதுதல்; நகை உடைத்து ஆகும்
அன்றே -
பிறர் கேட்டுச் சிரிக்கத் தக்கதாகி விடும், அல்லவா?;
ஆதலின் இது நன்று - ஆகையால், இம்மானைப் பிடிக்கும் செயலில்
பிழையில்லை; என்னா - என்று; அந்நாள் - அப்போது; சதுமுகன்
தாதை -
பிரமனின் தந்தையாகிய இராமன்; தகையுடைத் தம்பிக்கு -
பெருமைமிக்க தம்பி இலக்குவனுக்கு; சொன்னான் -எடுத்துரைத்தான்.

     இராமனும் தன் கொள்கையில் பின் வாங்காது இலக்குவனிடம்,
நம் விரதத்தினின்றும் மாறி நிற்றல் ஆகாது என்றான்.                65