3303. | ஆயிடை, அன்னம் அன்னாள், அமுது உகுத்தனைய செய்ய வாயிடை, மழலை இன்சொல் கிளியினின் குழறி, மாழ்கி, 'நாயக! நீயே பற்றி நல்கலைபோலும்' என்னா, சேயரிக் குவளை முத்தம் சிந்துபு சீறிப் போனாள். |
ஆயிடை - இப்பேச்சுக்களின் இடைப்புகுந்து; அன்னம்அன்னாள் - பேடை அன்னம் போன்ற சீதை; மாழ்கி -வருத்தமுற்று; அமுது உகுத்தனைய - அமுதம் சிந்தினாற் போன்று;செய்ய வாயிடை மழலை இன்சொல் - சிவந்த வாயில் இனியமழலை போலும் சொற்களை; கிளியினின் குழறி - கிளி மொழிவதுபோல் கொஞ்சிக் கூறி; 'நாயக - என் நாதனே; நீயே பற்றி நல்கலைபோலும் - இம்மானை நீயே பிடித்துத் தரமாட்டாயா; என்னா -என்று (ஊடல் கொண்டு); சேயரிக் குவளை - சிவந்த வரிகளைஉடைய குவளை மலர் போன்ற கண்களில்; முத்தம் சிந்துபு -கண்ணீர் முத்துக்கள் சிந்த; சீறிப் போனாள் - கோபம் கொண்டு செல்லத் தொடங்கினாள். இலக்குவன் கருத்தைத் தன் ஊடற் கோலத்தால் இராமபிரானிடம் மறுத்துக் கூறுகின்றாள் சீதை. 67 |