இளையவனை நிறுத்திவிட்டு இராமன் மானைத் தொடர்தல் 3304. | போனவள் புலவி நோக்கி, புரவலன், 'பொலன் கொள் தாராய்! மான் இது நானே பற்றி, வல்லையின் வருவென், நன்றே; கான் இயல் மயில் அன்னாளைக் காத்தனை இருத்தி' என்னா, வேல் நகு சரமும், வில்லும் வாங்கினன் விரையலுற்றான். |
போனவள் புலவி நோக்கி - அவ்வாறு சென்ற சீதையின் ஊடலைப் பார்த்து; புரவலன் - அனைவரையும் காத்தல் வல்ல இராமன், (இலக்குவனிடம்); 'பொலன் கொள் தாராய் - பொன்மயமான மலர் மாலை புனைந்தவனே; மான் இது நானே பற்றி- இம் மானை நானே பிடித்துக் கொண்டு; வல்லையின் வருவென் நன்றே - விரைவில் நன்கு வந்து விடுவேன்; (அதுவரை); கான் இயல் மயில் அன்னாளை - கானகத்து மயில் போன்ற சீதையை; காத்தனை இருத்தி - நீ காவல் காத்து இருப்பாயாக; என்னா - என்று கூறி; வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் - வேல் போன்ற கூரிய அம்புகளையும் வில்லையும் எடுத்துக் கொண்டு; விரையல் உற்றான் - வேகமாகச் செல்லலானான். சீதையின் ஊடலைத் தவிர்க்கும் பொருட்டு இராமன் தானே புறப்பட்டான். மேகம் கண்டு களிக்கும் மயில் போல, நீல மேக வடிவினனான இராமனைக் கண்டு களிக்கும் மயில் சீதை என்பதாம். கோப்பெருந்தேவி ஊடல் பாண்டியனுக்கும் கண்ணகிக்கும் அவலம் விளைத்தது; சீதையின் ஊடல் சீதைக்கும் இராமனுக்கும் அவலம் விளைத்தது. 68 |