3306. மந்திரத்து இளையோன் சொன்ன வாய்மொழி
     மனத்துக் கொள்ளான்;
சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள்
     சலத்தை நோக்கி,
சிந்துரப் பவளச் செவ் வாய் முறுவலன்,
     சிகரச் செவ்விச்
சுந்தரத் தோளினான், அம்
     மானினைத் தொடரலுற்றான்.

     மந்திரத்து இளையோன் - எண்ணிச் சிந்திக்க வல்ல தம்பி
இலக்குவன்; சொன்ன வாய்மொழி - எடுத்துக் கூறிய வாய்மை மிக்க
மொழியை; சிகரச் செவ்விச் சுந்தரத் தோளினான் - மலையென
உயர்ந்த அழகிய தோள்களை உடைய இராமன்; மனத்துக்
கொள்ளான் -
தன் மனத்தில் ஏற்றுக் கொள்ளாதவனாய்; சந்திரற்கு
உவமை சான்ற -
பூரணச் சந்திரனுக்கு உவமை கூறத்தக்க;
வதனத்தாள் சலத்தை நோக்கி - முகத்தை உடைய சீதையின்
கோபத்தையே எண்ணியவனாய்; சிந்துரப் பவளச் செவ்வாய்
முறுவலன் -
சிந்தூரமும் பவளமும் போன்ற சிவந்த இதழ்களில்
புன்முறுவல் பூண்டவனாய்; அம்மானினைத் தொடரல் உற்றான் -
அந்த மானைத் தொடர்ந்து செல்லத் தொடங்கினான்.

     வாய்மொழி - வாய்மை ஆகிய மொழி. பண்புத் தொகை.
வாயின் மொழி எனப் பொருள் கொண்டால் வேற்றுமைத் தொகை.

     இலக்குவனின் எச்சரிக்கையும், சீதையின் கோபமும்இராமனுக்குச்
சிரிப்பைத் தந்தன, அவன் வீரனாகையால்.                         70