3307.மிதித்தது மெல்ல மெல்ல;
     வெறித்தது வெருவி; மீதில்
குதித்தது; செவியை நீட்டி, குரபதம்
     உரத்தைக் கூட்டி,
உதித்து எழும் ஊதை, உள்ளம், என்று
     இவை உருவச் செல்லும்
கதிக்கு ஒரு கல்வி வேறே
     காட்டுவது ஒத்தது அன்றே.

    (அந்த மாய மான்); மெல்ல மெல்ல மிதித்தது - மெதுவாய்
மெதுவாய் நிலத்தில் ஊன்றி நடந்தது; வெருவி வெறித்தது -
(பின்னர்) அஞ்சினாற் போல் வெறித்து நோக்கியது; செவியை நீட்டி -
காதுகளை விறைத்து நீட்டியவாறு; குரபதம் உரத்தைக் கூட்டி - தன்
கால் குளம்புகளை மார்புடன் ஒடுக்கி; மீதில் குதித்தது - வானேறித்
தாவியது; உதித்து எழும் ஊதை - பொங்கி வரும் காற்று; உள்ளம்
என்று இவை -
மனம் என்னும் இவற்றை; உருவச் செல்லும் கதிக்கு
-
(வாயு வேகம், மனோ வேகம் என்கின்ற வேகங்களை) தாண்டிச்
செல்லும் விரைவு நடைக்கு; ஒரு கல்வி - ஒரு புதிய பெயரைக்
கற்பிக்கும்படி; வேறே காட்டுவது ஒத்தது - புதிதான நடையைக்
காட்டுவதாய் அமைந்தது; அன்றே - ஈற்றசை.

     வாயு வேக, மனோ வேகங்களைக் கடந்த வேகத்தில் இம்மான்
சென்றதால் புதிய பெயர் ஒன்று சூட்டும்படியாக அவ்வேகம்
அமைந்தது என்றார்.                                              71