3310.'காயம் வேறு ஆகி, செய்யும் கருமம்
     வேறு ஆகிற்று அன்றே?
ஏயுமே; என்னின் முன்னம்
     எண்ணமே இளவற்கு உண்டே;
ஆயுமேல் உறுதல் செல்லாம்;
     ஆதலால், அரக்கர் செய்த
மாயமே ஆயதே; நான் வருந்தியது'
     என்றான் - வள்ளல்.

    'காயம் வேறு ஆகி - (இந்த மானின்) வடிவம் மானாக
வேறுபட்டிருந்தாலும்; செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே -
இதன் செயல்களோ மானின் இயல்பிலிருந்து மாறுபட்டதாய்த்
தோன்றுகின்றன; என்னின் முன்னம் - எனக்கு முன்னே; இளவற்கு
எண்ணமே உண்டே -
தம்பி இலக்குவனுக்கு இது குறித்த சிந்தனை
தோன்றியதில் நியாயம் உண்டு தானே; ஏயுமே - (அவன் எண்ணம்)
பொருத்தமாகத்தான் இருக்கிறது; ஆயுமேல் - நன்றாக நானும்
ஆராய்ந்திருந்தால்; உறுதல் செல்லாம் - இங்கு வந்திருக்க
மாட்டேன்; ஆதலால் - எனவே; நான் வருந்தியது - நான்
இப்போது வருந்தி உணர்வது; அரக்கர் செய்த மாயமே ஆயதே -
இராக்கதர் மாயம் செய்ததன் விளைவையே; என்றான் வள்ளல் -
என அருள் வள்ளலாகிய இராமன் எண்ணினான்.

     மானின் இயல்புக்கு மாறாகத் தந்திரம் வல்லதாக இம் மாயமான்
இயங்குகிறது. ஒரு கட்டத்தில் களைப்புற வேண்டிய விலங்குஇராமனை
இழுத்துக் கொண்டு தொலை தூரம் வந்து விட்டது.இவற்றால் இராமன்
மனம் சிந்திக்கலாயிற்று.                                        74