இராமன் அம்பால் மாரீசன் அலறி வீழ்தல் கலிவிருத்தம் 3311. | 'பற்றுவான், இனி, அல்லன்; பகழியால் செற்று, வானில் செலுத்தல் உற்றான்' என மற்ற அம் மாய அரக்கன் மனக் கொளா, உற்ற வேகத்தின் உம்பரின் ஓங்கினான். |
'இனிப் பற்றுவான் அல்லன் - இனி (இராமன் என்னைப்) பிடிக்க முயலமாட்டான்; பகழியால் செற்று - அம்பால் கொன்று; வானில் செலுத்தல் உற்றான் - விண்ணில் செலுத்தக் கருதினான்'; என - என்று; மனக் கொளா - சிந்தையில் உணர்ந்தவனாய்; அம் மாய அரக்கன் - மாயை வல்ல அம்மாரீசன்; உற்ற வேகத்தின் - மிக்க விரைவுடன்; உம்பரின் ஓங்கினான் - வானத்தில் உயரே பாய்ந்தான். மற்ற - அசை. பிடிக்க எண்ணும் மனநிலை இராமனிடம் மாறிவிட்டதை மாரீசன் அறிந்தான். இனி அம்பால் கொல்வான் என்று கணித்தான். 75 |