மாயம் உண்டு என மதித்து இராமன் பர்ண சாலைக்கு விரைதல் 3314. | வெய்யவன், தன் உருவொடு வீழ்தலும், 'செய்யது அன்று' எனச் செப்பிய தம்பியை, ஐயன் வல்லன்; என் ஆர் உயிர் வல்லன்; நான் உய்ய வந்தவன் வல்லன்' என்று உன்னினான். |
வெய்யவன் - கொடியவனாகிய மாரீசன்; தன் உருவொடு வீழ்தலும் - தன் இயற்கை வடிவத்தோடு மரண முற்று வீழவும்; செய்யது அன்று எனச் செப்பிய தம்பியை - இம்மான் உண்மையானது அன்று என்று (நுனித்துணர்ந்து) கூறிய தம்பி இலக்குவனைக் குறித்து; 'ஐயன் வல்லன் - என் இளவல் திறமையாளன்; என் ஆர் உயிர் வல்லன் - என் இனிய உயிர் போன்றவன் வல்லமை உடையவன்; நான் உய்ய வந்தவன் வல்லன்- என்னைக் காக்க (என் தம்பியாக) வந்தவன் பேரறிவாளி'; என்று உன்னினான் - என்று இராமன் எண்ணினான். வல்லன் என்று பன் முறை கூறியது இலக்குவன் வல்லமையை உணர்ந்த வியப்பினால் என்க. தம்பியை ஐயன், ஆர் உயிர், உய்ய வந்தவன் என்று பாராட்டிச் சிறப்பித்தான் இராமன். 78 |