3316.'புழைத்த வாளி உரம்
    புக, புல்லியோன்,
இழைத்த மாயையின், என்
     குரலால் இசைத்து
அழைத்தது உண்டு; அது கேட்டு
     அயர்வு எய்துமால்,
மழைக் கண் ஏழை' என்று,
     உள்ளம் வருந்தினான்.

    'புழைத்த வாளி - ஊடுருவிச் செல்லும் அம்பு; உரம் புக -
தன் மார்பில் பட்டதும்; புல்லியோன் - இழிந்தவனாகிய மாரீசன்;
இழைத்த மாயையின் - செய்த மாயத்தினால்; என் குரலால்
இசைத்து -
என் குரல் போன்ற குரலால் (சீதையையும்
இலக்குவனையும்) கூவி; அழைத்தது உண்டு - அழைத்துள்ளான்
அல்லவா?; அது கேட்டு் - அக்குரலைப் பிறழ உணர்ந்து;
மழைக்கண் ஏழை - மழை போல் குளிர்ந்த கண்களை உடைய
பேதை ஆகிய சீதை; அயர்வு எய்தும் - துன்பம் உறுவாள்'; என்று
உள்ளம் வருந்தினான் -
என்று மனம் நொந்தான் (இராமன்). ஆல்-
அசை.

     மழைக் கண் - மழை போல் கண்ணீர் விடுகிற கண் என்றுமாம்.  80