3318.'மாள்வதே பொருள்
     ஆக வந்தான்அலன்;
சூழ்வது ஓர் பொருள் உண்டு;
     இவன் சொல்லினால்
மூள்வது ஏதம்;
     அது முடியாமுனம்
மீள்வதே நலன்' என்று,
     அவன் மீண்டனன்.

    (எனினும்); 'மாள்வதே பொருள் ஆக - சாவதே நோக்கமாக;
வந்தான் அலன் - மாரீசன் வந்தவனாகத் தோன்றவில்லை; சூழ்வது
ஓர் பொருள் உண்டு -
இவன் திட்டமிட்ட ஒரு நோக்குடன்
வந்துள்ளான்; இவன் சொல்லினால் - இவன் கூக்குரலால்; மூள்வது
ஏதம் -
தீங்கு நிகழ உள்ளது; அது முடியா முனம் - அத் தீங்கு
நிறைவேறுவதன் முன்னே; மீள்வதே நலன் - திரும்பப் பர்ண
சாலையை அடைவதே நலம் பயக்கும்;" என்று அவன் மீண்டனன் -
என்று எண்ணித் திரும்பி வரலானான்.

     இப்படலத்தில் அரக்கர் மாயைக்கு அவதார நாயகர்களும்
இலக்காவதும், உயர் குடிப் பெண்ணாயினும் தயக்க மயக்கங்களுக்கு
இரையாவதும், நுட்ப அறிவுடையார் எத்தீமையையும் முன்கூட்டி
அறிவர் என்பதும் வெளிப்படுத்தப்படுதலைக் காண்கிறோம்.           82