கலிவிருத்தம்

3319. சங்கு அடுத்த தனிக்கடல் மேனியாற்கு
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம்;
கொங்கு அடுத்த மலர்க்குழல் கொம்பனாட்கு
இங்கு அடுத்த தகைமை இயம்புவாம்.

    சங்கு அடுத்த தனிக்கடல் மேனியாற்கு - சங்குகள்
பொருந்திய ஒப்பில்லாத கடல் போன்ற நீல நிறமுள்ள
திருமேனியுடைய இராமனுக்கு; அங்கு அடுத்த நிலைமை
அறைந்தனம் -
பொன் மானைத் தொடர்ந்து போன இடத்தில்
நிகழ்ந்த தன்மையைச் சொன்னோம்; கொங்கு அடுத்த மலர்க்குழல்
கொம்பனாட்கு -
நறுமணம் பொருந்திய பூக்களைச் சூடிய கூந்தலை
உடைய பூங்கொம்பு போன்ற சீதைக்கு; இங்கு அடுத்த தகைமை
இயம்புவாம் -
இப்பன்னக சாலையில் நிகழ்ந்த தன்மையைச்
சொல்லுவோம்.

     இராமன் மேனிக்குக் கடல் உருவகம் 'கருங்கடலைச்
செங்கனிவாய்க் கவுசலை என்பாள் பயந்தாள்' என வரும் (656).
மேலும் 'மையோ மரகதமோ மறிகடலோ' எனவும் காணலாம் (1926).
கொங்கு - தேனும் ஆம். தகைமை என்பதற்கு இராவணனால்
பற்றப்பட்டமை எனவும் கூறுவர்.

     மலர்க்குழல் கொம்பு - இல்பொருள் உவமை. இது காப்பியத்தின்
முன் நிகழ்ச்சியைக் கூறி இனிக் காப்பியத் தலைவிக்கு வரப் போவதை
உணர்த்தும் கவிக் கூற்றாம்.                                    1