'இராமனுக்குத் தீங்கு நேராது' என்று இலக்குவன் அறிவுறுத்தல்

3323.'எண்மை ஆர் உலகினில்,
     இராமற்கு ஏற்றம் ஓர்
திண்மையார் உளர்
     எனச் செப்பற்பாலரோ?
பெண்மையால் உரைசெயப்
     பெறுதிரால்' என,
உண்மையான், அனையவட்கு
     உணரக் கூறினான்.

    எண்மை ஆர் உலகினில் - எளிமை பொருந்திய உலகத்தில்;
இராமற்கு ஏற்றம் ஓர் திண்மை யார் உளர் எனச் செப்பற்
பாலரோ -
இராமனுக்கு மிக்க, சிறப்புடைய ஒரு வலிமையுடையவர்
இருக்கிறார் எனக் கூறுவார்களா?; பெண்மையால் உரை செயப்
பெறுதிரால் -
நீர்உம் பெண்ணறிவால் இவ்வாறு கூறிவிட்டீர்; என
உண்மையான் அனையவட்கு உணரக் கூறினான் -
என்று உண்மை
நிலையை உணர்ந்த இலக்குவன் அச் சீதைக்கு அறிந்து கொள்ளும்
வகையில் எடுத்துச் சொன்னான்.

     எண்மை - எளிமை. எண் பொருளவாகச் செலச் சொல்லி' (குறள். 424)
என்ற தொடரால் அறியலாம். எண்ணிக்கையும் ஆம். உண்மையான் என்பது
பொன்மானைப் பொய்ம் மானென்ற உண்மையை உணர்ந்தவனுமாம்,
என்றும் இராமனுக்கு உண்மையோடிருப்பவன் எனவும் ஆம்.
அனையவட்கு - அனை + அவட்கு எனக் கொண்டு தன் அன்னை
போன்ற சீதைக்கு என்றும் உரைப்பர். இனி உலகத் தாய் எனவும்
கூறுவர்.                                                   5