3326.'இடைந்துபோய் நிசிசரற்கு, இராமன்,
     எவ்வம் வந்து
அடைந்த போது அழைக்குமே?
     அழைக்குமாம் எனின்,
மிடைந்த பேர் அண்டங்கள்,
     மேல, கீழன,
உடைந்துபோம்; அயன் முதல்
     உயிரும் வீயுமால்.

    இராமன் நிசிசரற்கு இடைந்து போய் - இராமன் அரக்கனுக்கு
வலி ஒடுங்கிப், பின் வாங்கி; எவ்வம் வந்து அடைந்த போது
அழைக்குமே -
துன்பம் வந்து சேர்ந்த சமயத்தில் (பிறரைத்
துணைக்குக்) கூப்பிடுவானோ? (மாட்டான்); அழைக்குமாம் எனின் -
கூப்பிட நேருமானால்; மிடைந்த பேரண்டங்கள் மேல கீழன
உடைந்துபோம் -
நெருங்கிய பெரிய அண்டங்களெல்லாம் மேல்
கீழனவாய் அழிந்து போய்விடும்; அயன் முதல் உயிரும் வீயும் -
பிரமன் முதலான உயிர்களும் அழியும், ஆல் - ஈற்றசை.

     இடைதல் - தோற்றுப்போதல் என்றுமாம். நிசிசரன் - இரவில்
சஞ்சரிக்கும் அரக்கன். அண்டப் பெருவெளியில் பல்வேறு உலகங்கள்
நெருங்கியிருப்பதை 'மிடைந்த' எனச் சுட்டினான். எவ்வம் - துன்பம்.
இராமன் எல்லா அண்டங்களிலுள்ள எல்லாப் பொருள்களிலும்
உள்ளும் புறமும் கலந்துள்ளவன் என்பதை முதலில் கூறினான்
இலக்குவன். அதனால் அவனுக்கு ஒரு தீங்கு நேரிடின் எல்லாம்
அழிந்திருக்கும்; அவ்வாறு அழியாததால் இராமனுக்கு எந்தத் தீங்கும்
வரவில்லை என்பதை உணர்த்தினானாம்.                        8