சீதை கடுஞ்சொல் செப்பலும், இலக்குவன் ஏகலும் 3330. | என்று அவன் இயம்பலும், எடுத்த சீற்றத்தள், கொன்றன இன்னலள், கொதிக்கும் உள்ளத்தள், 'நின்ற நின் நிலை, இது, நெறியிற்று அன்று' எனா, வன் தறுகண்ணினள், வயிர்த்துக் கூறுவாள்: |
என்று அவன் இயம்பலும் - என்று இலக்குவன் கூறலும்; எடுத்த சீற்றத்தள் - பொங்கிய கோபத்தவளும்; கொன்றன இன்னலள் - தன்னைக் கொன்றது போன்ற துன்பத்தை அடைந்தவளும்; கொதிக்கும் உள்ளத்தள் - கொதிக்கின்ற மனமுடையவளும் ஆன; வன்தறு கண்ணினள் - வலிய அஞ்சாமை உடைய சீதை; நின்றநின் நிலை இது நெறியிற்று அன்று எனா - (இலக்குவனை நோக்கி, 'இராமனுக்குற்ற தீங்கைக் கேட்டும் அவற்கு உதவச் செல்லாது) இங்கு நின்ற உன்னுடைய இந்த நிலை நீதிமுறைப்பட்டது அன்று' என்று; வயிர்த்துக் கூறுவாள் - பகை பாராட்டிச் சொன்னாள். கொன்றன - கொன்றது போன்ற, கொன்றன்ன இன்னா செயினும் (குறள். 109) என்று வருதலை ஒப்பிடலாம். சீதை, தன்னை இலக்குவன் கொன்றது போல வந்த துன்பத்தினள் என உரைப்பர். இந்நிலையைச், சீதை வாயிலாகவே சுந்தர காண்டக் காட்சிப் படலத்தில் 'இளவலை எண்ணலா வினையேன் சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் எனத் துறந்தானோ?' (5082) என்பதால் உணரலாம். 12 |