3331. | 'ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்; பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ வெருவலை நின்றனை; வேறு என்? யான், இனி, எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு' எனா, |
ஒரு பகல் பழகினார் உயிரை ஈவர் - ஒரு நாள் மட்டும் பழகின வராயினும் அன்புடையோர் தாம் பழகியவர்க்காகத் தம் உயிரையும் கொடுத்து உதவி புரிவர்; நீ பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் வெருவலை நின்றனை - (மாறாக) நீயோ இராமன் அழிவடைந்தான் எனும் தன்மையைக் காதால் கேட்டும் அஞ்சாமல் நின்றாய்; வேறுஎன் - இனி எனக்கு வேறு வழி யாது?; இனியான் எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா - இனிமேல் நான் தீயில் விரைந்து விழுந்து சாவேன் இவ்விடத்தே என்று கூறி..., ஆல் - அசை. ஒரு நாள் பழகினும் உயிரை ஈயும் என்பதற்குக் குகன்இராமனுடன் வனம் செல்லத் துணிந்தமை சான்றாகும் (1993).பெருமகன் - ஆண்களில் சிறந்தோன். பகல் - நாள், 'ஒல்லைகொடாஅ தொழித்த பகலும் (நாலடி. 169) என வருதல் காண்க. 13 |