3335.'இருப்பெனேல், எரியிடை
     இறப்பரால் இவர்;
பொருப்பு அனையானிடைப்
     போவெனே எனின்,
அருப்பம் இல் கேடு வந்து
     அடையும்; ஆர் உயிர்
விருப்பனேற்கு என் செயல்?'
     என்று, விம்மினான்.

    இருப்பெனேல் எரியிடை இவர் இறப்பர் - (சீதை கூறியவாறு
போகாமல்) இங்கிருப்பேனாயின் தீயிலே பிராட்டியார் வீழ்ந்து சாவார்;
பொருப்பு அனையானிடைப் போவெனே எனில் - மலை போன்ற
இராமனிடம் செல்வேனாயின்; அருப்பம் இல் கேடு வந்து
அடையும் -
காவலில்லாத தீங்கு பிராட்டிக்கு வந்து சேரும்;
ஆர்உயிர் விருப்பனேற்கு என் செயல் என்று விம்மினான் -
அரிய உயிர் மீது ஆசையுடைய எனக்கு எச் செயல் செய்வது என
எண்ணி ஏங்கினான். ஆல் - அசை.

     இராமனுக்கு மலை உவமை ஆகிறது. இதனை அருப்பம் -
அற்பம் எனவுமாம் தடையுமாம். ஆருயிர் விருப்பனேன் என்பதால்
உயிரை மாய்த்துக் கொள்ள எண்ணும் எண்ணம் குறிப்பாகப்
     புலப்படுகிறது. இதனால் இலக்குவன் தன்னையே வெறுக்கும்
மனநிலை உள்ளவன் என்பது தெரிகிறது.17