3337. | 'போவது புரிவல் யான்; புகுந்தது உண்டுஎனின், காவல்செய் எருவையின் தலைவன் கண்ணுறும்; ஆவது காக்கும்' என்று அறிவித்து, அவ் வழி, தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான். |
யான் போவது புரிவல் - நான் செல்வேன்; புகுந்தது உண்டெனின் - (ஏதேனும் தீயது) நேர்வது உண்டானால்; காவல் செய் எருவையின் தலைவன் கண்ணுறும் ஆவது காக்கும் - காவல் புரிகின்ற கழுகரசன் சடாயு கண்டு தன்னாலியன்ற அளவு பாதுகாப்பான்; என்று அறிவித்து - எனச் சீதையிடம் கூறி; செம்மல் தேவர் செய் தவத்தினால் அவ்வழி ஏகினான் - இலக்குவன் தேவர்கள் செய்த தவத்தினால் (இராமன் மானைத் தொடர்ந்த) அந்த வழியில் சென்றான். 'காவல் செய் எருவையின் தலைவன்' என்பது சடாயுவைச் சுட்டும். சடாயு காண் படலத்தில் 'நீவிரும் நல்நுதல் தானும் இக் காட்டில் வைகுதிர்; காக்கு வென் யான்' என்ற மொழிகள் (2727) இதனை வலியுறுத்தும். இலக்குவன் சீதையைத் தனியே விட்டுச் செல்லவும் அப்போது இராவணன் அவளைக் கவர்ந்து செல்லவும் அதனால் அவனும் அவன் குலமும் மாளவும் செய்ததற்கு அடிப்படை தேவர்கள் செய்த தவமாகும். 19 |