3341. தாமரைக் கண்ணொடு ஏர்
     தவத்தின் மாலையன்;
ஆமையின் இருக்கையன்;
     வளைந்த ஆக்கையன்;
நாம நூல் மார்பினன்;
     நணுகினான் அரோ-
தூ மனத்து அருந்ததி
     இருந்த சூழல்வாய்.

    தாமரைக் கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன் - தாமரை
மணிகளாலான அழகிய தவத்திற்குரிய மாலை அணிந்தவனாய்;
ஆமையின் இருக்கையன் - ஆமை போல் ஐந்து பொறிகளை
அடக்கியவன் போன்ற தோற்றமுடையவனாய்; வளைந்த ஆக்கையன்-
கூனிய உடம்பை யுடையவனாய்; நாமநூல் மார்பினன் - பெருமை
பொருந்திய பூணூலை அணிந்த மார்பை உடையவனாய் இராவணன்;
தூமனத்து அருந்ததி இருந்த சூழல் வாய் நணுகினான் - மாசற்ற
மனமுள்ள அருந்ததி போன்ற சீதை இருந்த பன்ன சாலை இடத்தை
வந்தடைந்தான். அரோ - அசை.

     ஆமையின் இருக்கை - ஆமை மனை எனக் கூறி அதன்
ஓட்டால் அமைந்தது என்பர். நாமம் - பெருமை, 'நாமநீர் அயோத்தி'
(1307) எனப் பால காண்டத்தில் இப் பொருளில் வரும். சீதையின் தூய
கற்புக்கு அருந்ததியே உவமையாகப் பயன்பட்டுள்ளமை காப்பிய
மரபாகும். 'தீதிலா வட மீனின் திறம் இவள் திறமென்றும்'
கண்ணகியின் கற்பின் சிறப்பை இளங்கோவடிகள் கூறுவார்.
(சிலப்பதிகாரம் 1.27). 'அருந்ததி அகற்றிய ஆசில் கற்பினாய்' எனச்
சிந்தாமணியின் 327 ஆம் பாடலிலும் காணலாம்.

     அருந்ததி வசிட்ட முனிவரின் மனைவி. தன் கற்பின் சிறப்பால்
வட திசையில் விண்மீனாய் விளங்குகிறாள் என்பது புராண மரபு.

     கண்ணொடு - ஒடு உருபு கருவிப் பொருளில் வந்தது. அருந்ததி-
உவமை ஆகுபெயர்.                                        23