சீதை வரவேற்றல் 3343. | தோகையும், அவ்வழி, 'தோம் இல் சிந்தனைச் சேகு அறு நோன்பினர்' என்னும் சிந்தையால், பாகு இயல் கிளவியாள், பவளக் கொம்பர் போன்று, 'ஏகுமின் ஈண்டு' என, எதிர்வந்து எய்தினாள். |
தோகையும் அவ்வழி - சீதையும் அவ்வனத்தில்; தோமில் சிந்தனைச் சேகுஅறு நோன்பினர் என்னும் சிந்தையால் - குற்றமற்ற மனத்தையும் குற்றமற்ற விரதத்தையும் உடையவர் இவர் எனும் எண்ணத்தால்; பாகு இயல் கிளவியாள் - தேன்பாகு போலும் இனிய சொற்களை உடையவளும்; பவளக் கொம்பர் போன்று - பவளக் கொம்பு போல, அழகை உடையவளுமான சீதை; ஈண்டு ஏகுமின் என எதிர்வந்து எய்தினாள் - 'இங்கு எழுந்தருள்க' என்று முன்னே வந்து இராவணக் கபட சன்னியாசியை வரவேற்க வந்தாள். சேகு - குற்றம். தம்மில்லத்திற்கு வரும் துறவிகளை இன்சொற் கூறி விருந்தோம்பும் பண்பு இல்லறத்தாரின் கடமை. இதனைக் காட்சிப் படலத்தில் சீதை இராமனை எண்ணி 'விருந்து கண்டபோது என் உறுமோ' எனக் கவலைப்படுவதால் (5083) நன்கு அறிய முடியும். தோகை - மயில், சாயலாலும் நடையாலும் சீதைக்கு உவமை. பாகு - சொல்லுக்கு உவமை. பவளக் கொம்பு - வடிவுக்கு உவமை. பாகியல் கிளவி பவளக் கொம்பு இவை இயைந்து வந்த உவமை, இல் பொருள் உவமையாம். ஏகுமின் - உயர்வுப் பன்மை. பாகு இயல் - இயல் என்பது உவம உருபு கொம்பர் - கொம்பு என்பதன் போலி. தோகை - உவம ஆகுபெயர். 25 |