3362.'பொன்னகரத்தினும்,
     பொலன்கொள் நாகர்தம்
தொல் நகரத்தினும்,
     தொடர்ந்த மா நிலத்து
எந் நகரத்தினும், இனிய;
     ஈண்டு, அவன்
நல் நகரத்தன
     நவை இலாதன.

    பொன்னகரத்தினும் - பொன்மயமான தேவந்திரனின்
நகரமாகிய அமராவதியைவிடவும்; பொலன் கொள் நாகர்தம் தொல்
நகரத்தினும் -
பொலிவு மிக்க நாகர்களுடைய பழைய நகரமாகிய
போகவதியை விடவும்; தொடர்ந்த மாநிலத்து எந்நகரத்தினும்
இனிய -
(அவ்வுலகங்களால் மேலும் கீழுமாகத்) தொடரப்பட்ட
இப்பூவுலகிலுள்ள எந்த நகரத்தை விடவும், இனிமையுடையது; ஈண்டு-
இவ்வுலகில்; அவன் நல் நகரத்தன நவை இலாதன -அவனுடைய நல்ல
இலங்கை நகரத்தில் உள்ளவை எவ்விதக் குற்றமும்இல்லாதன.

     பொன்னகரம் - அமராவதி - நாகர் நகரம் - போகவதி.
மேலுலகம் கீழுலகம் நடுவிலுள்ள இவ்வுலகம் ஆகிய எவ்வுலகிலும்
இல்லாத பெருமையும் பொலிவும் உடையது இலங்கையாம்
இராவணனின் தலைநகரம். அதிலுள்ள பொருள்கள் மூவுலகிலுள்ள
பொருள்களைக் காட்டிலும் இனியவை; குற்றமற்றவை. இவ்வாறு
இராவணனின் பெருமை நகர் வாயிலாக விளக்கப் பெறும். 'உலகம்
மூன்றில் தெட்புறு பொருள்கள் எல்லாம் இதனுழைச் செறிந்த' என்பார்
பின்னரும் (4834). இனிய என்பதை அடையாகக் கொண்டு அழகிய
எனவும் உரைப்பர்.                                          44