3364.'வெம்மை தீர் ஒழுக்கினன்;
     விரிந்த கேள்வியன்;
செம்மையோன்; மன்மதன்
     திகைக்கும் செவ்வியன்;
எம்மையோர் அனைவரும், "இறைவர்"
     என்று எணும்
மும்மையோர் பெருமையும்
     முற்றும் பெற்றியான்.

    வெம்மை தீர் ஒழுக்கினன் - கொடுமை தீர்ந்த நல்லொழுக்கம்
உடையவன்; விரிந்த கேள்வியன் - பரந்த வேதங்களை
உணர்ந்தவன்; செம்மையோன் - நடுநிலை உடையவன்; மன்மதன்
திகைக்கும் செவ் வியன் -
காமனே கண்டு ஏங்கும் அழகுடையவன்;
எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும் - எவ்வுலகில்
உள்ள எல்லோரும் தெய்வம் எனக் கருதும்; மும்மையோர்
பெருமையும் முற்றும் பெற்றியான் -
மூன்று முதல் தெய்வங்களின்
பெருமைகளும் முழுதும் பெற்ற பெருமை உடையவன்.

     கேள்வி - வேதம்; எழுதப்படாது ஓதியே உணரப்பெறும் நூல்.
சுருதி என்பதும் இப்பொருள் தருவதால் 'கற்றிலனாயினும் கேட்க'
என்பதற்கேற்ப சான்றோரிடம் நூல்களைக் கேட்டுணர்ந்தவன்
எனலுமாம். அழகின் கடவுள் மன்மதன் அவனே இராவணன்
அழகைக் கண்டு திகைப்பான் எனில்; இராவணன் அழகு
எல்லையற்றது என்பது குறிப்பு. மும்மையோர் திரிமூர்த்திகள் பிரமன்,
திருமால், சிவன். செம்மை - நற்பண்புமாம். செவ்வி - காளைப்
பருவமுமாம்.

     எம்மையோர் 'மை' விகுதி இடப்பொருளது. மும்மையோர் -
மூவர் இதில் 'மை' பகுதிப் பொருள் விகுதி.                      46