3369.மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு
     இலான், "மறுவின் தீர்ந்தார்,
வெங் கண் வாள் அரக்கர்" என்ன
     வெருவலம்; மெய்ம்மை நோக்கின்,
திங்கள் வாள் முகத்தினாளே!
     தேவரின் தீயர் அன்றே;
எங்கள் போலியர்க்கு நல்லார்
     நிருதரே போலும்' என்றான்.

    மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு இலான் - சீதை
அச் சொல் கூறி அறிவுறுத்தியது கேட்ட எல்லை கடந்து
ஒழுகுவோனாம் இராவணன்; மறுவின் தீர்ந்தார் வெங்கண் வாள்
அரக்கர் என்ன வெருவலம் -
குற்ற மற்றவர் கொடியவர்களாம்
வாள் வீசும் இராக்கதர் எனக் கூறியதும் அஞ்ச மாட்டோம்;
மெய்ம்மை நோக்கின் - உண்மையாக ஆராயின்; திங்கள் வாள்
முகத்தினாளே -
சந்திரன் போல் ஒளி படைத்த முகமுடையவளே!;
தேவரின் தீயர் அன்றே - (அவ்வரக்கர்கள்) தேவர்களைக்
காட்டிலும் கொடியவர் அல்லரே; எங்கள் போலியர்க்கு நிருதரே
நல்லார் போலும் என்றான் -
எங்கள் போல்வார்க்கு அரக்கர்களே
நல்லவர் என்று சொன்னான்.

     வரம்பு இலான் - வலிமை வரம் போன்றவை பெற்றுப் பிறரை
விடச் சிறந்தவனாயினும் அறவொழுக்கம் என்ற எல்லையைக்
கடந்தவன். வெங்கண் - கொடுமை; கொடிய கண்களை உடையவர்கள்
என்றுமாம். வெருவுதல் - அஞ்சி நடுங்குதல். தேவரின் - தேவர்
போல எனவும் ஆம். போலியர் என்ற சொல்லில் இராவணனின்
போலி வேடமும் தொனிப் பொருளாய் விளங்குகிறது. துறவிகள்
சமநிலை உடையவராதலால் தேவர்க்கும் அரக்கர்க்கும் வேறுபாடு
கருதோம் எனக் கூறியதாகவும் கொள்வர். போலும் : ஒப்பில் போலி.    51