3373.மானவள் உரைத்தலோடும்,
     'மானிடர், அரக்கர்தம்மை,
மீன் என மிளிரும் கண்ணாய்! வேர்
     அற வெல்வர் என்னின்,
யானையின் இனத்தை எல்லாம் இள
     முயல் கொல்லும்; இன்னும்,
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை
     மான் கொல்லும்' என்றான்.

    மானவள் உரைத்தலோடும் - பெருமை மிக்க சீதை இவ்வாறு
கூறியவுடன், (இராவணன்); மீன் என மிளிரும் கண்ணாய் - மீன்
போலப் பிறழ்ந்து ஒளிவிடும் கண்ணை உடையவளே!; அரக்கர்
தம்மை மானிடர் வேர் அறவெல்வர் என்னின் -
இராக்கதர்களை
மனிதர் அடி வேரில்லாமல் வெற்றி கொள்வார்கள் என்றால்;
யானையின் இனத்தை எல்லாம் இளமுயல் கொல்லும் - யானைக்
கூட்டம் அனைத்தையும் இளைய முயல் கொன்று விடும்; இன்னும்
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான்
-
மேலும் வளைந்த நகமுடைய ஆண் சிங்கங்களின் கூட்டத்தை மான்
கொன்று விடும் என்று கூறினான்.

     மானவன் என்பதன் பெண்பால் மானவள், மான்போன்ற
மருண்ட பார்வையுடையவள் என்றுமாம். மிளிர்தல் - ஒளிவிடுதல்
யானையை முயல் கொல்லுதலும் சிங்கத்தை மான் கொல்லுதலும்
உலகில் நடவாதன. எனவே அரக்கரை மனிதர் கொல்லுதல் நடவாத
செயல் ஆகும்.

     எனவே, இப்பாடலில் பொய்த்தற் குறிப்பு உளது.              55