| 3382. | ஆற்ற வெந்துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின், ஏற்றம் என் நினைக்கல் ஆகும்? எதிர் எடுத்து இயம்பல் ஆகும் மாற்றம் ஒன்று இல்லை; செய்யும் வினை இல்லை; வரிக்கல் ஆகாக் கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என, குலைவு கொண்டாள். |
ஆற்ற வெந்துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் - (இராமனுக்குற்ற) மிகக் கொடிய துயரத்தை அடைந்துள்ள சீதை அப்போது (இராவணன் உருவமாற்றத்தால்) அடைந்த துன்பத்தைக் கருதின்; ஏற்றம் என் நினைக்கல் ஆகும் - அதனைவிட மிக்க துன்பம் வேறு எதை நினைக்க முடியும்?; எதிர் எடுத்து இயம்பல் ஆகும் மாற்றம் ஒன்று இல்லை - இதற்கு ஒப்பாக வேறு சொல்லக் கூடிய சொல் ஒன்றும் இல்லாமல் போயிற்று; செய்யும் வினை இல்லை - அவள் அவனைவிட்டுத் தப்பும் செயலும் தெரியவில்லை; வரிக்கல் ஆகாக் கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என(க்) குலைவு கொண்டாள் - கட்டமுடியாத யமன் வந்து சேர்ந்த போது உயிர் நடுங்குவது போல நடுக்கம் அடைந்தாள். ஆற்ற - மிக அலக்கண் - துன்பம் சஞ்சலமானகண். துன்பம் வரும்போது கண் கலங்கும்; அதனால் அலக்கண் என்பது துன்பத்தைக் குறித்தது. காரியத்தின் பெயர் காரணத்திற்கு வந்த இலக்கணை. சீதை பட்ட துன்பத்தைக் கூறச் சொற்கள் கிடைக்கவில்லை. மாற்று வினை செய்ய வழியும் தெரிய வில்லை. வரித்தல் - கட்டுதல். கூற்றத்திற்கு உயிர்களின் முடிவு வந்ததும் அதைத் தான் கட்டுவதன்றித் தான் கட்டுப்படாத நிலை வரிக்கல் ஆகா என்பதற்கு விரும்பத்தகாத எனவும் உரைப்பர். கூற்றம் - உயிரை உடலிலிருந்து கூறுபடுத்திப் பற்றிச் செல்வதால் இயமனைக் குறித்தது எனவும், சீதைக்கு மாற்றமில்லை, வினையும் இல்லை என்ற திகைப்புண்டாகிய நிலை இது. 64 |