3391.கொண்டான் உயர் தேர்மிசை;
     கோல் வளையாள்
        கண்டாள்; தனது ஆர்
     உயிர் கண்டிலளால்;
மண்தான் உறும்
     மின்னின் மயங்கினளால்;
விண்தான் வழியா
     எழுவான் விரைவான்.

    உயர் தேர் மிசைக் கொண்டான் - (அவ்வாறு பெயர்த்த
நிலத்தை) உயர்ந்த தன் தேர் மேல் வைத்துக் கொண்டான்; கோல்
வளையாள் கண்டாள் -
(அச் செயலை) அழகிய வளையணிந்த
சீதை பார்த்தாள்; தனது ஆருயிர் கண்டிலள் - தன்னுடைய அரிய
உயிரைக் காணவில்லை; மண் உறும் மின்னின் மயங்கினள் -
தனக்குரிய நிலமாம் மேகத்தை விட்டுத் தரையில் விழுந்த ஒரு
மின்னற் கொடி போலக் கலங்கினாள் (அப்போது இராவணன்); விண்
வழியா எழுவான் விரைவான் -
ஆகாய வழியாக விரைவிற்
செல்லக் கருதினான். ஆல் இரண்டும் அசை; தான் இரண்டும் அசை.

     கோல் வளை - அழகிய வேலைப்பாடுகள் அமைந்த வளை.
கோல் - திரட்சியும் ஆம். வார்கோல் செறிய (புறம். 36) கோனிற
வளையினார்க்கு (சீவக. 209) எனவரும். தேர் நிலத்தின் மீது சிறிதுதூரம்
சென்றதை வயவர் பூமி மேல் அவன் தேர் சென்ற நெடுநெறிபோனார்
(3479) என்பதில் காணலாம். மண்உறுமின் -இல்பொருளுவமை.       73