சீதையின் அரற்றல்

3392.'விடு தேர் என, வெங் கனல்
     வெந்து அழியும்
கொடிபோல் புரள்வாள்;
     குலைவாள்; அயர்வாள்;
துடியா எழுவாள்;
     துயரால் அழுவாள்;
'கடிதா, அறனே! இது
     கா' எனுமால்.

    தேர் விடு என - (இராவணன் தேர்ப்பாகனைப் பார்த்து)
விரைவாகத் தேரைச் செலுத்து என்று கூற; வெங்கனல் வெந்து
அழியும் கொடி போல் -
கொடிய தீயில் வீழ்ந்து வெந்து அழிகின்ற
கொடி போன்று; புரள்வாள் குலைவாள் அயர்வாள் துடியா
எழுவாள் துயரால் அழுவாள் -
சீதை கீழே புரண்டு நிலை
குலைந்து செயலறியாது சோர்ந்து மனம் துடித்து எழுந்து பின் வருந்தி
அழுவாள்; அறனே கடிதா இதுகா எனும் - 'தருமமே!
இத்துன்பத்திலிருந்து விரைவாகக் காப்பாற்று' என வேண்டுவாள். ஆல்-
ஈற்றசை.

     தீயில் வீழ்ந்த கொடி எரிவது போலச் சீதை இராவணனின் தேர்மீது
துன்புற்றாள். கொடி, சீதைக்கு உவமை; தீ, இராவணனின்செயலுக்கு
உவமையாம். சீதை படும் பாட்டைப் பல வினைத்தொடர்கள் விளக்கும்.
மேலும் கடியா யறமே என்ற பாடத்திற்கு'ஒருவரும் கைவிடாத தருமமே
எனவும் உரைப்பர்.

     யாரும் துணையற்ற நிலையில் தருமமே காப்பாற்றும் என்றநம்பிக்கை
இதனால் புலனாகும்.                                           74