3399.வாக்கினால் அன்னான் சொல்ல, 'மாயையால்
    வஞ்சமான் ஒன்று
ஆக்கினாய்; ஆக்கி, உன்னை ஆர்
     உயிர் உண்ணும் கூற்றைப்
போக்கினாய்; புகுந்து கொண்டு போகின்றாய்;
     பொருது நின்னைக்
காக்குமா காண்டி ஆயின், கடவல்
     உன்தேரை' என்றாள்.

    அன்னான் வாக்கினால் சொல்ல - அந்த இராவணன் தன்
வாயால் இந்தப் பழிமொழிகளைக் கூற; (சீதை அவனை நோக்கி);
மாயையால் வஞ்ச மான் ஒன்று ஆக்கினாய் - மாயையினால் ஒரு
பொய்ம்மானைக் கற்பித்தாய்; ஆக்கி உன்னை ஆர்உயிர் உண்ணும்
கூற்றைப் போக்கினாய் -
உனது அரிய உயிரை அழிக்கும் யமன்
போன்ற இராமனை வேறு இடத்திற்குப் போகச் செய்தாய்; புகுந்து
கொண்டு போகின்றாய் -
இங்கு வந்து என்னைக் கவர்ந்து
செல்கிறாய்; பொருது நின்னைக் காக்குமா காண்டி ஆயின் - போர்
புரிந்து அவரிடமிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியை
அறிவாயானால்; உன்தேரை(க்) கடவல் என்றாள் - உன் தேரை
மேற்கொண்டு செலுத்தாதே என்று சொன்னாள்.

     வாக்கு - வாய், இடத்துத் தோன்றும் பொருள் இடத்திற்கு
ஆயிற்று. பொய்ம்மானைக் காட்டி என் கணவனைப் போக்கினாய்.
என்னையும் அவரில்லாத போது கவர்ந்தாய். இத்தகைய இழிசெயல்
செய்யாது தேரை நிறுத்தி நேரிடையாக அவருடன் போர் செய்வாயாக
எனச் சீதை கூறினாள்.

     உன்னை - உன்னுடைய என்ற பொருளில் வந்தது. இது உருபு
மயக்கம். கடவல் - எதிர்மறை ஏவல் வினைமுற்று.                 81