கலிவிருத்தம் 3405. | சாகை வன் தலையொடு மரமும் தாழ, மேல் மேகமும் விண்ணின் மீச் செல்ல, 'மீமிசை மாக வெங் கலுழன் ஆம் வருகின்றான்' என, நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே. |
(சடாயுவின் சிறகில் இருந்து வீசும் பெருங்காற்றினால்) மரமும் - மரங்களும்; சாகை வன் தலையொடு தாழ - கிளைகளோடு வலிய தலைப்புறத்துடன் (பூமியில்) படியவும்; மேல் மேகமும் - மேல் இடத்தில் உள்ள மேகங்களும்; விண்ணின் மீச் செல்ல - வானத்தின் மேல் ஒதுங்கிப் போகவும்; மீமிசை மாக வெங் கலுழன் ஆம் வருகின்றான் என - மிக உயர்ந்த வான் வழியில் பெருமை உடைய கொடிய கருடன் வருகின்றான் என்று எண்ணி; நாகமும் படம் ஒளித்து - நாகங்களும் படத்தை ஒடுக்கிக் கொண்டு; ஒதுங்கி நையவே - மறைந்து பதுங்கி வருந்த. சடாயுவின் சிறகில் இருந்து வரும் பெருங்காற்றால் மரங்கள் கிளைகளோடும் தலைப்புறத்துடனும் விழவும், வானத்தில் செல்லும் மேகம் மேலும் மேலே செல்லவும், கருடன் வருகின்றான் எனப் பாம்புகள் படம் குறைந்து நையவும், வந்தனன் என்க. சாகை - கிளை, மாகம் - பெருமை, ஒளித்து - ஒடுக்கி, கலுழன் - கருடன் மீமிசை - ஒருபொருட் பன்மொழி. 3 |