3410. | 'கெட்டாய் கிளையோடும்; நின் வாழ்வை எலாம் சுட்டாய்; இது என்னை தொடங்கினை? நீ பட்டாய் எனவே கொடு பத்தினியை விட்டு ஏகுதியால், விளிகின்றிலையால். |
கிளையோடும் கெட்டாய் - (உன்) சுற்றத்தவருடன் கெட்டுப் போனாய்; நின் வாழ்வை எலாம் சுட்டாய் - நினது வாழ்வு முழுவதையும் எரித்து அழித்துக் கொண்டாய்; நீ இது என்னை தொடங்கினை? - நீ (இத்தகு தகுதியில் செயலை) ஏன்? தொடங்கினாய்; பட்டாய் எனவே கொடு - (நீ) இறந்து பட்டாய் என்றே எண்ணிக் கொண்டு; பத்தினியை விட்டு ஏகுதி - இராமனது (கற்புக் கொழுந்தாம்) மனைவியை விட்டுச் செல்வாய்; விளிகின்றிலையால் - (அவ்வாறு செய்தால்) இறக்க மாட்டாய். உன் செயலால் உன் உறவினரும் நீயும் முழுதும் அழிந்துபடுவீர்கள். எனவே, கற்பின் கனலியை விட்டு உயிர் உய்ந்து போக என்றவாறு. சுட்டாய் - எதிர்காலம் இறந்த காலமாய் வந்த காலவழுவமைதி. எலாம் - இடைக்குறை. கொடு - இடைக்குறை, ஆல் இரண்டும் அசை. இப்பாடலில் சடாயு இராவணனின் அழிவையும் சுற்றத்தவர் அழிவையும் கூறி அச்சம் உண்டாக்கி அவன் செயலைத் தடுக்க முனைதலை உணர்க. 8 |