3410.'கெட்டாய் கிளையோடும்; நின்
     வாழ்வை எலாம்
சுட்டாய்; இது என்னை
     தொடங்கினை? நீ
பட்டாய் எனவே
     கொடு பத்தினியை
விட்டு ஏகுதியால்,
     விளிகின்றிலையால்.

    கிளையோடும் கெட்டாய் - (உன்) சுற்றத்தவருடன் கெட்டுப்
போனாய்; நின் வாழ்வை எலாம் சுட்டாய் - நினது வாழ்வு
முழுவதையும் எரித்து அழித்துக் கொண்டாய்; நீ இது என்னை
தொடங்கினை? -
நீ (இத்தகு தகுதியில் செயலை) ஏன்?
தொடங்கினாய்; பட்டாய் எனவே கொடு - (நீ) இறந்து பட்டாய்
என்றே எண்ணிக் கொண்டு; பத்தினியை விட்டு ஏகுதி - இராமனது
(கற்புக் கொழுந்தாம்) மனைவியை விட்டுச் செல்வாய்;
விளிகின்றிலையால் - (அவ்வாறு செய்தால்) இறக்க மாட்டாய்.

     உன் செயலால் உன் உறவினரும் நீயும் முழுதும்
அழிந்துபடுவீர்கள். எனவே, கற்பின் கனலியை விட்டு உயிர் உய்ந்து
போக என்றவாறு. சுட்டாய் - எதிர்காலம் இறந்த காலமாய் வந்த
காலவழுவமைதி. எலாம் - இடைக்குறை. கொடு - இடைக்குறை, ஆல்
இரண்டும் அசை. இப்பாடலில் சடாயு இராவணனின் அழிவையும்
சுற்றத்தவர் அழிவையும் கூறி அச்சம் உண்டாக்கி அவன் செயலைத்
தடுக்க முனைதலை உணர்க.                                   8