3412.'உய்யாமல் மலைந்து, உமர் ஆர் உயிரை
        மெய்யாக இராமன் விருந்திடவே,
கை ஆர முகந்து கொடு, அந்தகனார்,
ஐயா! புதிது உண்டது அறிந்திலையோ?

    ஐயா - ஐயனே; உமர் உய்யாமல் மலைந்து - உம் இனத்தவர்
ஆகிய கர தூடணர் முதலியோர் தப்பிப் பிழைக்க முடியாதபடி போர்
செய்து; இராமன் ஆர் உயிரை மெய்யாக விருந்திட - இராமன்
(அவர்களது) அருமையான உயிரைத் (தனக்கு) உண்மையான
விருந்தாகக் கொடுக்க; அந்தகனார் கை ஆரமுகந்துகொடு -
யமனார் கை நிறைய வாரி எடுத்து; புதிது உண்டது அறிந்திலையோ-
புதிதாக (விருந்து) உண்டதை (நீ) அறியவில்லையோ?; ஏ - அசை.

     இராமன் உன் இனத்தவரை ஒருவனாய் நின்று அழித்தமை
கண்டும் ஏன் இச்செயல் செய்தாய் என்கிறான் சடாயு. புதிது உண்டது
- பல நாள் அரக்கர் தலைவனாம் இராவணனுக்கு அஞ்சி அரக்கர்
உயிரைக் கவராத யமன் இராமன் உதவியால் அவர்கள் உயிரைக்
கவர்ந்தமை பற்றி இவ்வாறு கூறினார். உமர் - உம் இனத்தவர் ஆகிய
கர தூடணர் முதலியோர். அந்தகனார் - எமன்.                    10