| 3414. | 'எல்லா உலகங்களும், இந்திரனும், அல்லாதவர் மூவரும், அந்தகனும், புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்; வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ? |
எல்லா உலகங்களும் - மூவுலகில் உள்ளவர் அனைவரும்; இந்திரனும் - தேவர் தலைவன் ஆகிய இந்திரனும்; அல்லாதவர் மூவரும் - இவர்கள் அல்லாது (உயர்ந்த) மும்மூர்த்திகளும்; அந்தகனும் - யமனும்; புல்வாய் புலிகண்டது போல்வர் அலால் - (இந்த இராமலக்குவரைக் கண்டபோது) மான்கள் புலியைக் கண்டது போல் (அஞ்சி நடுக்கம் அடைவரே) அல்லாமல்; வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ - வில்தொழில் வித்தகனாகிய இராமனை வெல்லுதற்கு உரிய வலிமை உடையர் ஆவரோ? ஆகார். உலகத்தவரும், இந்திரனும், மூவரும் எமனும் வில்லாளனைக் கண்டு மான் புலியைக் கண்டது போல் அஞ்சுவார்களே யல்லாமல் அவனை வெல்லும் வலிமை உடையர் அல்லர் என்பதாம். அந்தகன் - அழிவைச் செய்பவன், புல் வாய் - மான், மிடுக்கு - வீரம், வலிமை. மூவர் - தொகைக் குறிப்புச் சொல். புல்வாய் - வேற்றுமைத்தி தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, காலப் போக்கில் காரண இடுகுறிப்பெயராயிற்று. 12 |