3417.'புரம் பற்றிய போர்
     விடையோன் அருளால்
வரம் பெற்றவும், மற்று
     உள விஞ்சைகளும்,
உரம் பெற்றன ஆவன-
     உண்மையினோன்
சரம் பற்றிய சாபம்
     விடும் தனையே.

    புரம் பற்றிய - முப்புரங்களும் பற்றி எரியச் செய்த; போர்
விடையோன் அருளால் -
போர் ஆற்றல் உள்ள காளை
வாகனனாகிய சிவபிரானது அருளால்; பெற்றவும் வரம் - (நீ)
பெற்றுள்ள வரங்களும்; மற்று உள விஞ்சைகளும் - மற்றும் உள்ள
போர் வித்தைகளும்; உண்மையினோன் - (அழியா) உண்மைப்
பொருளாக உள்ள இராமன்; சாபம் பற்றிய சரம் விடும்தனையே -
வில்லில் தொடுத்த அம்பை விடுகின்ற வரையில்; உரம் பெற்றன
ஆவன -
வலிமை உள்ளனவாம்.

     திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் அருளால் நீ பெற்றுள்ள
வரமும் மற்றும் உன்னிடம் உள்ள மாயப் போர் ஆற்றலும்
உண்மையினோன் வில்லில் அம்பு கோத்து விடும் அளவே நிற்கும்,
அதற்கு மேல் நில்லா என்பதாம். உண்மையினோன் - சொன்ன
சொல்லை நிறைவேற்றும் வாய்மை உடையோன் எனலுமாம். விஞ்சை-
வித்தை சாபம் - வில், உம் - அசை.                              15