3418.'வான் ஆள்பவன் மைந்தன்,
     வளைத்த விலான்
தானே வரின், நின்று
     தடுப்பு அரிதால்;
நானே அவண் உய்ப்பென்,
     இந் நன்னுதலை;
போ, நீ கடிது'
     என்று புகன்றிடலும்,

    வான் ஆள்பவன் மைந்தன் - விண் உலகை ஆளும்
தசரதனுடைய மகனாகிய இராமன்; வளைத்த விலான் தானே வரின்
-
வளைத்த வில்லினை உடையவனாய் (நேரில்) தானே வந்து
விட்டால்; நின்று தடுப்பு அரிது - அவன் எதிரே நின்று (அவனால்
வரும் தீங்கினைத்) தடுப்பது அருமையானது; இந்நன்னுதலை - இந்த
அழகிய நெற்றியை உடைய சீதையை; அவண் நானே உய்ப்பென் -
முன்பு இருந்த இடத்திற்கு நானே கொண்டு போய்ச் சேர்க்கிறேன்; நீ
கடிது போ -
நீ விரைவாகப் போய்விடு; என்று புகன்றிடலும் -
என்று சடாயு கூறிய அளவில் - கேட்டான் (நிருதர்க்கு இறை என
அடுத்த பாடலில் முடியும்).

     இராமன் வந்தால் நீ தப்ப முடியாது எனவே இப்பொழுதே
சீதையை என்னிடம் விட்டு விட்டு, நீ போய் விடு; நான் அவளை
முன்பு இருந்த இடத்திலேயே சேர்த்து விடுகிறேன் என
இராவணனிடம் சடாயு கூறினான். வான் ஆள்பவன் - முன்பு
நிலவுலகை ஆண்டவன் தற்போது வானுலகை ஆள்கிறான் என்பதாம்.
தடுப்பு - தடுத்தல், விலான் - இடைக்குறை, முற்றெச்சம் எனலுமாம்.
நன்னுதல் - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
ஆல் - அசை.                                          16