இராவணன், "சீதையை விடேன்" எனல்

3419.கேட்டான் நிருதர்க்கு இறை; கேழ்
     கிளர் தன்
வாள் தாரை நெருப்பு
     உக, வாய் மடியா,
'ஓட்டாய்; இனி நீ
     உரை செய்குநரைக்
காட்டாய் கடிது' என்று,
     கனன்று உரையா,

     கேட்டான் நிருதர்க்கு இறை - (சடாயு கூறிய சொற்களைக்)
கேட்டவனாகிய அரக்கர்க்குத் தலைவன் ஆகிய இராவணன்; கேழ்
கிளர் தன் -
ஒளி விளங்குகின்ற தன்னுடைய; வாள் தாரை நெருப்பு
உக -
ஒளியுள்ள கண்ணின் கரு விழியில் இருந்து, சினத் தீ
வெளிப்பட; வாய் மடியா - உதட்டைக் கடித்துக் கொண்டு; இனி நீ
ஓட்டாய் -
இனி மேல் நீ (வீண் சொற்களை) ஓட விடாதே; உரை
செய்குநரைக் கடிது காட்டாய் -
(நீ) சொல்லுகின்றவர்களை
விரைவாகக் காட்டுவாய்; என்று கனன்று உரையா - என்று சினந்து
சொல்லி - (இது 19ஆம் பாடலில் உள்ள "என்னும் அளவில்"
என்பதோடு சென்று முடியும்)

     சடாயுவின் சொல் கேட்ட இராவணன் கண்கள் சிவந்து வாய்
மடித்து, 'இனி மேல் பேச வேண்டாம். நீ கூறிவர்களைக் காட்டு'
என்று சினந்து சொன்னான். கேழ் - ஒளி. வாள்தாரை - ஒளியுள்ள
கண்ணின் கருவிழி, ஓட்டாய் - சொற்களை ஓடவிடாதே. மடியா -
செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம். ஓட்டாய் -
ஒருமை எதிர் மறை ஏவல் வினை, காட்டாய் - ஒருமை உடன்பாட்டு
ஏவல் வினை.                                               17