அஞ்சிய சீதைக்குச் சடாயு அபயம் கூறல் கலித்துறை 3421. | என்னும் அளவில், பயம் முன்னின் இரட்டி எய்த, அன்னம் அயர்கின்றது நோக்கி, 'அரக்கன் யாக்கை சின்னம் உறும் இப்பொழுதே; "சிலை ஏந்தி, நங்கள் மன்னன் மகன் வந்திலன்" என்று, வருந்தல்; அன்னை! |
என்னும் அளவில் - என்று (இராவணன்) கூறிய அளவில்; பயம் முன்னின் இரட்டி எய்த - அச்சம் முன்பை விட இரு மடங்காக; அன்னம் அயர்கின்றது நோக்கி - அன்னப்பறவை போன்ற சீதை வருந்துவதைப் பார்த்து; அன்னை - (சடாயு சீதையைப் பார்த்து) அன்னையே; இப்பொழுதே அரக்கன் யாக்கை சின்னம் உறும் - இப்பொழுதே அரக்கனாகிய இராவணனது உடம்பு (பல) துண்டுகளாகும்; நங்கள் மன்னன் மகன் - நமது தலைவன் ஆகிய தசரதனது மகன்; சிலை ஏந்தி வந்திலன் - வில்லைக் கையில் ஏந்தி வந்தானில்லை; என்று வருந்தல் - என்று எண்ணி நீ வருந்தாதே. இராவணன் விடேன் என்று கூறியதைக் கேட்ட சீதை முன்பைவிட இரு மடங்கு வருந்துவதைப் பார்த்த சடாயு. இப்பொழுதேஅரக்கன் உடல் துண்டுகள் ஆகும். மன்னன் மகன் வில்லேந்திக்காக்க வரவில்லையே என்று வருந்தாதே என ஆறுதல் கூறினான்.சின்னம் - துண்டு; சின்ன பின்னமாதல் என்ற வழக்கை நினைவுகூர்க. நங்கள் - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, அன்னை -அண்மை விளி. 19 |